தேடுக !

புதன், 16 மார்ச், 2022

மலரும் நினைவுகள் (75) பணி நிறைவும் பாராட்டு விழாவும் !

             

         (2001-ஆம் ஆண்டு  நிகழ்வுகள்)

 

பதவி உயர்வு பெற்று 1996 -ஆம் ஆண்டு ஓசூருக்குச் சென்றதும், அங்கு நான் நேர்கொண்ட சூழல் என்னை மிகவும் கலவரப் படுத்தியது. எங்கு சென்றாலும் சுந்தரத் தெலுங்கு சுற்றிச் சுற்றி வந்து  என் காதுகளில் ஒலிக்கத் தொடங்கியதுகடைக்குச் சென்றால் தெலுங்குக் குரல்; காய்கறி வாங்கச் சென்றால் தெலுங்குக் குரல்; மருந்துக் கடையில் தெலுங்கு; மளிகைக் கடையில் தெலுங்கு !

 

என்ன வேண்டுமென்று அவர்கள் தெலுங்கில் கேட்கையில் நான் தமிழில் தயங்கித் தயங்கிச் சொல்வேன். தமிழ் தெரிந்த மக்கள் தான். ஆனாலும் அவர்கள் இயல்பாகவே தெலுங்கில் தான் பேசுவார்கள் கன்னட நாட்டின் எல்லையில் அமைந்திருந்தாலும் ஓசூர் மக்கள் கன்னடம் பேசுவதில்லை; தெலுங்கில் தான் பேசுவார்கள் !

 

ஒரு மனிதனை வானூர்தியில் ஏற்றிச் சென்று ஆத்திரேயாவில் கதுமென (திடீரென) இறக்கிவிட்டு வந்துவிட்டால் அவன் நெஞ்சம் எப்படிப் பதை பதைக்குமோ அப்படி நான் உணர்ந்தேன். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் சூழ்நிலையிலிருந்து மாறி எங்கும் தெலுங்கு எதிலும் தெலுங்கு என்னும் சூழ்நிலையில் குடும்பத்துடன் வாழ்வதென்பது பாதுகாப்புக் குறைவானதாக எனக்குத் தோன்றியது. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை முதலில் உறுதிப் படுத்திக்கொள்ள  வேண்டும் என்று எண்ணினேன் !

 

இதற்கு அடித்தளமாக என் நட்பு  வட்டத்தை உருவாக்கப் பல வழிகளைக் கையாண்டேன். தஞ்சை, நாகை, திருச்சி, புதுகை மாவட்டங்களைச் சேர்ந்தோர் யார் யார் எந்தெந்த நிறுவனங்களில் பணி புரிகிறார்கள் என்பதைப் புலனாய்வு செய்து அவர்களுடன் நட்புக் கொள்ளத் தொடங்கினேன். இரண்டு மாதங்களுக்குள் என் நட்பு வட்டத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர் !


இஃதல்லாமல் நான் குடியிருந்த இராயக்கோட்டை சாலை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில், குடியிருப்போர் நலச் சங்கம் ஒன்றைத் தொடங்கி அதன் தலைவராக ஓராண்டு காலம் பணியாற்றினேன் ! நட்பு வட்டம் பெருகிய பின் பாதுகாப்பு உணர்வு என்னில் அழுத்தமாகப் பதிந்து என்னை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தது !

 

இந்த நட்பு வட்டம் தேவையான நேரங்களில் ஒருவர்க்கொருவர் உதவி செய்துகொள்வது என்னும் அடிப்படையில் உருப்பெற்றதால், வலுவான அமைப்பாக மாறியது. சோழ மண்டல நண்பர்கள் நலச் சங்கம் என்னும் இந்த அமைப்பு, உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக நம்பிக்கையை ஏற்படுத்தியது !

 

பணியிலிருந்து ஓய்வு பெறும் நான் பணி ஓய்வுச் செய்தியை என் நட்பு வட்டத்தினருக்குச் சொல்லித் தான் ஆகவேண்டும். ஊராருக்கு  விளம்பாவிட்டாலும், உற்ற நண்பர்களுக்கு உரைக்காமல் தவிர்த்தால் அவர்களது மனக் குறைக்கு ஆட்பட நேரிடுமல்லவா


ஆகையால் எழினி வழியாக ஒரு சிலருக்கு மட்டும் பாராட்டு விழாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தேன் ! அழைக்கப் பெற்றவர்கள் அவர்களது அணுக்க நண்பர்களுக்குச் செய்தியைச் சொல்ல, பணி ஓய்வுச் செய்தி நட்பு வட்டத்தில் விரைவாகப் பரவத் தொடங்கியது !

 

பணியிலிருந்து ஓய்வு பெற்று மூன்று நாள் ஆயிற்று. நான் வேண்டிக் கொண்டபடி பாராட்டுவிழா 04-05-2001 அன்று ஏற்பாடாகியது. பயிற்சி நிலைய நண்பர்கள் விழாவை விரிவாகச் செய்திருந்தனர். விழா அரங்கினை பூக்களால் மிக அழகாக ஒப்பனை செய்திருந்தனர். காலை 10-30 மணியளவில் நிகழ்ச்சிகள் தொடங்கின. முதல்வர் திரு..அப்துல் அமீது அவர்கள் தலைமை வகிக்க, வாழ்த்துரை வழங்க விரும்புவோர் முன்வரலாம் என்று அழைக்கப்பட்டனர் !

 

அமைதியான குளத்தில் கல் எறிந்தது போல், பயிற்சி நிலையத்தில் பத்து நாள் முன்பு ஒரு சலசலப்பை  ஏற்படுத்தியிருந்த பயிற்சி அலுவலர் திரு.மாதவன் முதலாவதாக வந்து எனக்குச் சால்வை அணிவித்து நினைவுப் பரிசாக பாரதிதாசன் பாடல் புத்தகம் ஒன்றை அளித்துவிட்டு வாழ்த்துரையைத் தொடங்கினார் !


அனைவரும் வியக்கும் வண்ணம் என்னைப் பற்றி உயர்வாகப் புகழ்ந்து பேசி நான் எப்படி அலுவலர்களுக்கு உதவிகள் புரிந்து அனைவர் மனத்திலும் இடம்பிடித்தேன் என்பதை எடுத்துரைத்து, இந்த மாதவன் தானா பத்து நாள் முன்பு வேறு மாதிரியாகப் பேசியவர் என்று அனைவரையும் வியக்க வைத்தார் !

 

அடுத்தடுத்துப் பல அலுவலர்கள் வாழ்த்துரை வழங்கி நினைவுப் பரிசுகளை வழங்கலாயினர். மணி 1-30 –ஐக் கடந்தும் கூட வாழ்த்துரை தொடர்ந்துகொண்டே இருந்தது. என் நட்பு வட்டத்திலிருந்து கீழ்க்காணும் நண்பர்கள் வருகை தந்து விழாவில் கலந்து கொண்டதுடன் வாழ்த்துரை வழங்கி நினைவுப் பரிசுகளும் அளித்தனர் !

 

    01) திரு.தாயுமானவன்          Cashier State Bank of Mysore

    02) திரு.முத்துராமலிங்கம்      Elecrical Contractor

    03) திரு.முனியாண்டி            Advocate

    04) திரு.சிவக்குமார்             Ashok Leyland Unit.1

    05) திரு.இராமநாதன்            Ashok Leyland Unit.2

    06) திரு.வேலுச்சாமி            Titan Industries Ltd

    07) திரு கிருபா                  Asst, Director, Health Dept

    08) திரு.சுகுமார்                 Agricultural Extension Officer

    09) திரு.கிருபானந்தன்          Asst.Engineer, T.N.E.B.

    10) திரு.இராமசாமி             Taluk Supply Officer

    11) திரு.தன்ராஜ்                Sub Inspector of Police

    12) திரு.அன்பழகன்             T.V.S.Motor Compny

    13) திரு.ஜான் ஆசீர்             Panchyat Union, Hosur

    14) திரு.சிராஜுதீன்              Industries Dept

    15) திரு.ஏழுமலை              Housing Board Office

    16) திரு.கணேஷ்குமார்         Charted Accountant

    17) திரு.ஆர்.ஜனார்த்தனன்      Retd Training Officer, Salem

    18) திரு..அப்பாவு              Retd Training Officer, T.V.Malai

    19) திரு.முகமது உசேன்         Asst Training Officer, Nagai

    20) திரு.குப்பையா செட்டி       Part Time Medical Officer

    21) திரு.அரிகிருஷ்ணன்         D’man, Housing Board Office

    22) திரு.பாலாஜி ராவ்           B.D.O. Hosur

    23) திரு..அன்பழகன்           H.R.D, Asian Bearings

    24) திரு.வெ.கணேசன்           Revenue Inspector

    25)திரு.எஸ்.முத்து              Asst.Engr, Central Silk Board

    26) திரு.கந்தசாமி                Manager, Hotel Gowrisankar.

    27)திரு.நெடுஞ்செழியன்        Hindustan Motors Limited.

    28) திரு.இராபர்ட்ஸ் (?)          Correspondent, St. Joseph I.T.I.

 

[புனித ஜோசப் ஐ.டி... தாளாளர் பெயர் மட்டும் சரியாக நினைவில்லை. அவர் தனது நிலைய ஈப்பு வண்டியைப் பயன்படுத்தி என் இல்லத்தினரை என் வீட்டிலிருந்து விழா அரங்கத்திற்கு அழைத்து வந்தார். அத்துடன் இன்னொரு வண்டி மூலம் ஓசூர் கௌரிசங்கர் உணவகத்திலிருந்து மதிய உணவை, விழா அரங்கத்திற்குக் கொண்டுவந்து இறக்கியதுடன், அவர் நிலைய அலுவலர்களைக் கொண்டு  பரிமாறும் வேலையையும்  திறம்படச் செய்து மகிழ்ச்சியூட்டினார்.]

 

அலுவலர்களும் நண்பர்களும் வாழ்த்துரை வழங்கிய பின் பகுதி நேர மருத்துவ அலுவலர் திரு.குப்பையா செட்டி, உதவி இயக்குநர் திரு.இரவிச் சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சால்வை அணிவித்தனர். அடுத்து, விழாத் தலைவர், முதல்வர் அப்துல் அமீது அவர்கள், வாழ்த்துரை வழங்கி, சந்தன மாலை அணிவித்தார். அத்துடன், கோவை மண்டலப் பயிற்சித் துணை இயக்குநர், கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து நிலைய  முதல்வர்கள் ஆட்சி அலுவலர்கள், உதவி இயக்குநர்கள் சார்பில் விலை உயர்ந்த டைட்டன் கைக்கடிகாரம் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார் !

 

இறுதியில் நான் ஏற்புரை வழங்கினேன். எனக்குக் கல்விக் கண் திறந்து வைத்து வாழ்வில் உயர்வடைய வைத்த  ஆசிரியர்கள் முதல், அரசுப் பணியில் உதவிகள் நல்கிய அனைத்து அலுவலர்கள் வரை எல்லோருக்கும் நன்றி நவில்கையில் நண்பகல் மணி 2-00 ஆயிற்று !

 

அதன் பின் காவலர்கள், துப்புரவளர்கள் உள்பட பயிற்சி நிலைய அலுவலர்கள், வெளியிலிருந்து வந்திருந்த நண்பர்கள்,என் இல்லத்தார் என  எல்லோரையும் அமரவைத்து என் கையால் உணவு பரிமாறினேன். இதைப் பலரும் எதிர்பார்க்கவில்லை. சில அலுவலர்கள் உணர்ச்சிப் பிழம்பாகி, கண்களில் நீர் துளிக்க என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் !

 

எனக்கு அணிவித்த 57 சால்வைகளும் அடுத்து வந்த ஆண்டுகளில் குளிரால் வாடிய ஏழைகள் மற்றும் உறவினர்களின்  வாட்டம் போக்க உதவியது. நினைவுப் பரிசுகளில் பல பிறந்த நாள் பரிசாகப் பல குழந்தைகளுக்கு  வழங்கப் பெற்று, அவர்கள் முகத்தில் மகிழ்ச்சிக் கீற்றை  வரவழைக்க உதவியது !

 

வேலை வாய்ப்பு, பயிற்சித் துறையில் 1966 – ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தகுளத்துத் தவளையான இந்த வேதரெத்தினம் 2001 –ஆம் ஆண்டில் அரசுப் பணிப் பயணத்தை நிறைவு செய்கையில் பக்குவப்பட்ட மனிதனாக அனைவருக்கும் உதவி செய்யும் உள்ளம் படைத்தவனாகமுழு மனிதன்என்னும் தகுதியுடன் உலா வந்துகொண்டிருக்கிறேன் !

 

அகவை 79 –ல், முகநூல் போன்ற பல்வேறு தளங்களில் உங்களுடன் உலா வந்து கொண்டிருக்கும் இந்த உதய சூரியனை இன்னும் பல்வேறு உயரங்களை எட்ட உளமார வாழ்த்துங்கள் ! அதுவொன்றே நான் உங்களுக்கு வைக்கும் வேண்டுகோள் !

 

             [ மலரும் நினைவுகள் தொடர் நிறைவு பெறுகிறது ]

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 02]

{16-03-2022}

-------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

செவ்வாய், 15 மார்ச், 2022

மலரும் நினைவுகள் (74) ஆட்சி அலுவலராக என் கடைசி நாள் காட்சி !

                    

                       (2001-ஆம் ஆண்டு  நிகழ்வுகள்)


படிப்பை முடித்துவிட்டுக் கவலையுடன் பணியைத் தேடியலையும் துன்ப நிலை  இளைய குமுகாயத்திற்கு முன்பும் இருந்தது; இப்போதும் இருக்கிறதுஇனியும் இருக்கத்தான் போகிறது ! இயற்கையின் இந்தத் திருவிளையாடலை மாற்ற வல்ல அரசியல் வல்லார்  இந்த நாட்டில் இதுவரை யாருமே தோன்றவில்லை !

 

பொட்டல் வெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் ஒற்றைப் பனைமரத்தில் அருநிழலில் நின்று கொண்டு, கண்களுக்கு மேல் நெற்றியில், உள்ளங்கையின் விளிம்பை வைத்து, எங்கேனும் நீர் நிலை தென்படுகிறதா என்று உற்று நோக்கும் வழிப்போக்கனைப் போல், என்ன வேலை கிடைக்கும் எப்போது கிடைக்கும் என்று கவலையுடன்  விழிகளை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்த துய்ப்பு (அனுபவம்) என்னையும் விட்டு வைக்க வில்லை !

 

என் ஏக்கத்துக்கு இரக்கப்பட்ட ஒரு நல்லவரின் பரிந்துரையின் பேரில் 1964 –ஆம் ஆண்டு ஆகத்து மாதம் கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் இளநிலை ஆய்வாளராக அன்னிலைப்பணி (TEMPORARY APPOINTMENT) கிடைத்தது !

 

பின்பு கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் நிலையமர்வாக (REGULAR APPOINTMENT) இளநிலை எழுத்தர் (LOWER DIVISION CLERK) பணி ! அடுத்து தேர்வாணைக் கழகத் தெரிவின் மூலம்  1966 –ஆம் ஆண்டு ஏப்ரல் 21 –ஆம் நாள் புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பண்டகக் காப்பாளராகப் பணியில் அமரும் வாய்ப்பு !

 

புதுக்கோட்டையில் பணியில் இணைவதற்கு முன்னதாக ஏறத்தாழ ஒன்றேமுக்கால் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்து அதன் மணத்தை நுகர்ந்த துய்ப்பு (அனுபவம்) இருந்ததால், புதுக்கோட்டையில் எனக்கு முதல் நாள் துய்ப்பு என்று சிலிர்ப்படையும் வகையில் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஏதுமில்லை ! திருமணமாகிக் கணவன் வீட்டுக்குச் செல்லும் புதுமணப் பெண் போலத் திகைப்பும், மெல்லிய அச்சமும், மிரட்சியும் எனக்கு அப்போது ஏற்படவில்லை !

 

பணியில் சேர்ந்த முதல் நாள் எனக்கு பிற நாள்களைப் போல இயல்பாகவே அமைந்திருந்தது. அதைப் போன்றே அரசுப் பணியில் இணைந்திருக்கும் கடைசி நாளான 2001 – ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 –ஆம் நாள்அரசுப் பணியில் என் கடைசி நாள்இயல்பாகவே இருக்கும் என்ற எண்ணத்துடன் ஆட்சி அலுவலர் அறையில் என் இருக்கையில் சென்று அமர்ந்தேன் ஒன்பது நாள் ஈட்டிய விடுப்புக்குப் பிறகு  !


அலுவலக உதவியாளர் திரு.காட்வின் @ கோவிந்தன் உள்ளே வந்து வணக்கம் சொல்லிவிட்டுச் சில நிமிடங்கள் அங்கேயே நின்றார்அவரை நிமிர்ந்து பார்த்தேன். கண்களின் கடைவிழியோரம் நீர் துளிர்த்திருந்தது. என்ன காட்வின் என்றேன். இன்றுடன் எங்களை விட்டுப் பிரியப் போகிறீர்கள். உங்களைப் போன்ற பரிவு மிகுந்த ஒரு அதிகாரியை இனி நாங்கள் காண்பது இயலாது என்று சொல்லிவிட்டுத் தேம்பத் தொடங்கினார் !

 

ஓ ! இன்றைய நாளை இயல்பாகக் கழிக்கலாம் என்றல்லவோ அலுவலகம் வந்தேன். அஃது இயலாமற் போய்விடுமோ ? திரு.காட்வினுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கையில் அலுவலக உதவியாளர் திரு.மல்லையா வந்து என் கைகளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டு விசும்பலானார் ! என்ன இதுஅவர்களும் உணர்ச்சிப் பிழம்பாகி, என்னையும் அதில் இறக்கி விட்டு விடுவார்கள் போலிருக்கிறதே ?

 

என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அவருக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கையில் அலுவலகத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக வரத் தொடங்கினர். உதவியாளர்கள், கணக்கர், பண்டகக் காப்பாளர்,  தட்டச்சர், இளநிலை உதவியாளர்கள், அலுவலக மேலாளர் என்று அனைவருமே வந்து வணக்கம் சொல்லிவிட்டுக் கண்கள் கலங்க நின்றனர் !

 

அதுவரைக் கட்டுப்பாட்டுடன் இருந்த என் கண்கள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் சட்டென்று  நீர்த் துளிகளைச் சுரந்தன. என் கண்களில் நீரைக் கண்டதும் மகளிர் சிலர் முகத்தைப் பொத்திக்கொண்டுக் கேவலாயினர் !

 

நான் என்ன அப்படிப் பெரிதாக இவர்களுக்குச் செய்துவிட்டேன் ? ஏன் இப்படி என் மீது அன்பு கொண்டு கண்களில் நீர் வழிய நின்று கொண்டிருக்கிறார்கள் ? ஊருக்குச் செல்லும் உறவினரைப் பிரியும் சிறு குழந்தை போல் அல்லவோ கண்கள் குளமாக அனைவரும் ஆற்றாமையால் தவிக்கிறார்கள் ?

 

நானும் அவர்களைப் பார்த்து விட்டு என் அகவையில் ஐம்பதை இழந்து எட்டு அகவைக் குழந்தையாக மாறி அல்லவோ உணர்வுகளின் சுழலில் அகப்பட்டுக் கொண்டு உருகிப் போகிறேன் ?

 

எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எப்படியெல்லாமோ இடர்பட்டு அரசுப் பணியில் இணைகிறோம். அங்கங்கே சில நாள் பழகுகிறோம், பின்னர் பிரிகிறோம், மறுபடியும் எங்காவது கூடுகிறோம். இந்தத் தொடர் வினையில் தூக்கணாங்குருவி போல இதயத்தின் ஆழத்தில் அன்பு என்னும் ஓலை கொண்டு கூட்டினைப் பின்னி அதில் நம்மையறிமலேயே குடியிருக்கத் தொடங்குகிறோம் !

 

செல்கின்ற இடமெல்லாம் உடன் பணி புரியும் அலுவலர்களுக்கு அன்பை வாரி வழங்கி வந்திருக்கிறேன்என்னை அறியாமலேயே ! அதுதான் இவர்கள் கண்களில் துளிர்க்கும் நீருக்கு அடையாளமோ ?

 

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும் (குறள். 71)

 

என்னும் வள்ளுவரின் வாக்கு இன்று என் முன்னதாக அணிவகுத்து நிற்கும் அன்பு நெஞ்சங்களின் கண்ணீர்த் துளிகளில் எதிரொலிக்கிறது ! இத்தகைய அன்பு மலர்களின் மணத்தை நான்கரை ஆண்டுகளாக நான்  நுகர்ந்து வந்திருப்பது நான் பெற்ற நற்பேறு அன்றி  வேறில்லை !

 

அலுவலகப் பணியாளர்களை அடுத்து பயிற்சி அலுவலர்கள் திரு.கைலாசம், திரு.மாதவன் இருவரும் வந்தனர். பணிக்காலத்தில் அவர்களுக்கு நான் செய்த நன்மைகளைப் பட்டியலிட்டு இருவரும் தங்கள் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர் !

 

காவலர்கள், துப்புரவாளர்கள், தொழில் நுட்ப அலுவலர்கள்  உள்பட அனைத்து அலுவலர்களும், நண்பகலுக்குள் ஒருவர் மாற்றி ஒருவராக வருகை தந்து தங்கள் அன்பையும் நல்வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துச் சென்றனர் !

 

பிற்பகலில் முதல்வர் என் அறைக்கு வந்து என்னுடன் பல செய்திகளையும்  பகிர்ந்து கொண்டு தன் வாழ்த்துகளையும் பதிவு செய்தார். மாலை மணி 5-00. அலுவலகத்திற்குள் சென்றேன். அனைவரும் எழுந்து நின்று என்ன சொல்லப் போகிறேன் என்று காத்திருந்தனர் !

 

கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல (குறள்.1100) என்கிறார் வள்ளுவர் வேறொரு சூழ்நிலையில். இன்று உணர்ச்சியலைகளால் உந்தப் பெற்றிருந்த நானும், வாயைத் திறந்து பேசும் ஆற்றலை இழந்து, கண்களில் துளிர்த்த நீருடன் கைகளை அசைத்துசென்று வருகிறேன்என்று சொல்லாமற் சொல்லிவிட்டு, என் வண்டியில் ஏறி அமர்ந்தேன். வழக்கம் போல் அது என்னைச் சுமந்து கொண்டு வீடு நோக்கி விரையத் தொடங்கியது !

 

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்படும் (குறள். 114)

 

என்னும் பொய்யா மொழியாரின் கூற்றுக்கு இன்று தான் என்னால் பொருள் உணர முடிந்தது !


------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 01]

{15-03-2022}

------------------------------------------------------------------------------------ 

மலரும் நினைவுகள் (73) பாராட்டு விழாவில் பங்கேற்க இசைவு !

   

            (2001-ஆம் ஆண்டு  நிகழ்வுகள்)

 

தவறு செய்தவர் தன் நிலையிலிருந்து இறங்கி வந்துஎன்னை மன்னித்து விடுங்கள்என்று சொன்னதும்  பனிக்கட்டியாக உறைந்து போயிருந்த என் உறுதி இளகத் தொடங்கியது. சற்று நேரம் என் மனத்திற்குள்ளேயே சிற்றளவில் ஒரு பட்டிமன்றம் நடந்தது ! 


பின்பு சில நிமிடங்கள் கழித்து அவரிடம் சொன்னேன், “உங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன் ஆனால் சில கட்டுப்பாடுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். 30-04-2001 அன்று காலை அலுவலகம் வருகிறேன். அன்று மாலை வழக்கம் போல் என் வண்டியிலேயே வீட்டிற்கு வருவேன்!”

 

என் வீடு வரை ஊர்தியில் அழைத்து வந்து என்னை இறக்கிவிட்டு சென்று வருகிறோம்என்று விடைபெற்றுச் செல்லத் தேவையில்லை. நான் ஓய்வு பெற்று விட்டதாக என்றும் நினைக்கப் போவதில்லை. நான் அமரும் நாற்காலி மாறலாம்; வாழும் ஊர் மாறலாம்; ஆனால் ஓய்வெடுக்கப் போவதில்லை. என் பணி ஏதோவொரு வகையில் இந்தக் குமுகாயத்துக்கு (சமுதாயத்துக்கு) தொடர்ந்துகொண்டே இருக்கும்” !

 

பணி ஓய்வுப் பாராட்டு விழாவுக்காக அலுவலர்களிடம் நிதி கேட்பதை நான் விரும்பவில்லை. அதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். 30-04-2001 அன்று பணி ஓய்வுப் பாராட்டு விழா நடத்துவதற்குப் பகரமாக 04-05-2001 அன்று நடத்துங்கள் !


கட்டாயம் வந்து கலந்து கொள்கிறேன்அலுவலர்களிடமிருந்து நல்வாழ்த்துகளை மட்டுமே நான் எதிர்பார்ப்பதாக அனைவரிடமும் சொல்லிவிடுங்கள் ! மகிழ்ச்சியுடன் செல்லுங்கள்”! என்று சொல்லியனுப்பினேன் !

 

திரு.மாதவன் உள்பட அனைவருக்கும் மனதில் ஒரு நிம்மதி ! ஒரு நிறைவு ! நன்றி சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றனர். முதல்வரிடம் சென்று செய்தியைச் சொன்னதும் அவருக்கும் மனத்தில் நிம்மதி வீச்சு


அலுவலர்களிடமிருந்து நல்வாழ்த்துகளை மட்டுமே நான் எதிர்பார்ப்பதாக அனைவரிடமும் சொல்லிவிடுங்கள்என்னும் என்னுடைய கூற்று அனைவர் மனத்திலும் விடை காண முடியாத ஒரு குழப்பத்தைத் தோற்றுவித்துவிட்டது !

 

ஓய்வு பெறும் அலுவலருக்கு அனைத்து அலுவலர்களின் சார்பாக நினைவுப் பரிசு அளிப்பது என்பது ஓசூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பின்பற்றி வந்த ஒரு வழக்கம். அதற்கு நன்றி சொல்லும் விதமாக பாராட்டு விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து அலுவலர்களுக்கும்  பிற துறை நண்பர்களுக்கும் ஓய்வு பெறும் அலுவலர் மதிய உணவு அளிப்பது என்பதும் அங்கு நடைமுறையில் இருந்து வரும் வழக்கம் ! 

 

மதிய உணவு அளிப்பதை நான் ஏற்றுக் கொள்கையில், அலுவலர்கள் அளிக்கும் நினைவுப் பரிசை நான் ஏற்பது தானே முறை என்ற சிந்தனையோட்டம் அலுவலர்களிடையே எழத் தொடங்கியது. இதற்கு விடை கண்டாக வேண்டும் என்று சிலர் கவலை கொண்டனர். நான் தொடர்ந்து விடுப்பில் இருந்ததால் என்னை அணுகிப் பேச முடியாமல் அவர்களிடையே ஒரு தேக்க நிலை ஏற்பட்டது !

 

இரண்டொரு நாள் கழித்து, வேறு சில அலுவலர்கள் என் வீட்டிற்கு வந்தனர். அவர்களில் திரு.கைலாசமும் இருந்தார். நினைவுப் பரிசை நான் ஏற்றுக் கொள்வது பற்றிய பேச்சு வந்தது. திரு.இராம ரெட்டிக்கு எந்த வகையில் விழா நடத்தினீர்களோ அதே வகையில் எனக்குப் பாராட்டு விழா நடத்தினால் போதும். எனக்கென்று சிறப்பு ஏற்பாடுகள் தேவையில்லை !


அவருக்குத் தங்க மோதிரம் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினீர்கள். அதுபோன்ற நினைவுப் பரிசு எனக்கு அளிக்கத் தேவையில்லை. நினைவுப் பரிசை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினால் பாராட்டு விழாவுக்கு என்னால் வர இயலாது  என்று உறுதியாகச் சொன்னேன் !

 

திரு.கைலாசம் வேறொரு வாதத்தை முன் வைத்தார். ”நீங்கள் அளிக்கும் மதிய உணவு விருந்தை நாங்கள் ஏற்கையில், நாங்கள் அளிக்கும் நினைவுப் பரிசையும் நீங்கள் ஏற்பது தான் முறை. அதை மறுக்கக் கூடாதுஎன்றார்!

 

அப்படியென்றால் பாராட்டு விழா வேண்டாம். நிறுத்தி விடுங்கள்என்று அவர்களிடம் சொன்னேன். என் உறுதியைக் கண்டு அவர்கள் திகைப்படைந்ததுடன் கவலையும் அவர்களைத் தொற்றிக் கொண்டது. சற்று நேரம் அங்கு இறுக்கம் நிலவியது. பின்பு திரு.கைலாசம் என்னிடம், “அலுவலர்களிடம் நிதி திரட்டி நினைவுப் பரிசு அளிப்பதை நீங்கள் விரும்பவில்லை என்பது புரிகிறது. அதை நாங்கள் வலியுறுத்தமாட்டோம்” !

 

அதே நேரத்தில், உங்களுடன் நான் ஓசூரில் மட்டுமல்ல, சேலத்திலும் பழகி இருக்கிறேன். என் அன்பின் அடையாளமாக நான் ஏதாவது சிறு பரிசு அளித்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், மறுக்கக் கூடாது என்றார். சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தேன் !


அவர் சொல்வதிலும் ஒரு ஞாயம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். பின்பு அவரிடம் எந்தவொரு நண்பரும் தங்கள் அன்பின் அடையாளமாகத் தனிப்பட்ட முறையில் சிறு நினைவுப் பரிசு அளித்தால் அதை ஏற்றுக் கொள்கிறேன்என்றேன் !

 

சிக்கலான ஒரு வினாவுக்கு விடை கண்டுவிட்ட மன நிறைவுடன், அனைவரும் என்னிடமிருந்து விடைபெற்றுச் சென்றனர் !


-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 30]

{14-03-2022}

------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

மலரும் நினைவுகள் (72) அனைவரையும் அதிரவைத்த ஈட்டிய விடுப்பு !


              (2001-ஆம் ஆண்டு  நிகழ்வுகள்)

 

சிமாதங்கள் முன்பு ஓய்வு பெற்ற திரு.இராம ரெட்டிக்கு நாம் எந்த வகையில் விழா எடுத்தோமோ அந்த வகையில் தான் ஆட்சி அலுவலருக்கும் விழா எடுக்க வேண்டும். காலமெல்லாம் நம்முடன் ஒன்றிணைந்து நின்ற நம்மவரில் ஒருவர்நம்தொழில் நுட்ப அலுவலர்வகையைச் சார்ந்த ஒருவர் ஓய்வு பெற்ற போது விழாவைத் தடபுடலாக நடத்தினோமா ? இல்லையே ?

 

அப்படி இருக்கையில், நம் தொழில் நுட்ப வகையைச் சாராத ஆட்சி அலுவலருக்கு மட்டும் ஏன் விழாவைப் பகட்டாக நடத்த வேண்டும் ?” இது தான் திரு.மாதவனின் வாதம். அவரது பேச்சைக் கேட்டு அங்கு குழுமியிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். ஓரிருவர் அவரிடம் எதிர்வாதம் செய்ய, அங்கு அமைதி விடைபெற்று அனல் பறக்கத் தொடங்கியது !

 

என் மீது அன்பு கொண்ட தொழில் நுட்ப அலுவலர் ஒருவர் என்னிடம் வந்து நடந்த நிகழ்ச்சிகளை விவரித்தார். அதைக் கேட்டதும் என் மனத்தில் சூறாவளி மையம் கொண்டது. மனம் கொந்தளித்தாலும் முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளாமல் அன்று மாலை வரை அமைதி காத்தேன் !


மாலை 4-45 மணியளவில் முதல்வரிடம் சென்று மறுநாளான ஏப்ரல் 21 – முதல், பணி ஓய்வு பெறும் ஏப்ரல் 30 வரை ஈட்டிய விடுப்புக் கேட்டு விண்ணப்பம் தந்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன் !

 

முதல்வருக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடனேயே அவரும் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். மறு நாள் நான் அலுவலகம் வரவில்லை என்றதும் பயிற்சி அலுவலர் திரு.கைலாசம் அவர்கள் முதல்வரிடம் வந்து ஆட்சி அலுவலர் ஏன் அலுவலகம் வரவில்லை என்று கேட்டிருக்கிறார். அவர் பணி ஓய்வு பெறும்  நாள் முடிய விடுப்புக் கேட்டு விண்ணப்பம் தந்துவிட்டுச்  சென்று விட்டார் ! 


எனக்கும் காரணம் புரியவில்லை  என்று முதல்வர் சொன்னதும் பயிற்சி அலுவலர் திரு.கைலாசத்திற்கு அனைத்தும் புரிந்து விட்டது. முந்திய நாள் நிகழ்வுகளை திரு.கைலாசம் முதல்வரிடம் எடுத்து  உரைத்திருக்கிறார். !

 

உதவி இயக்குநர் திரு.இரவிச்சந்திரன் அவர்களை வரச் சொல்லி அவருடனும் முதல்வர் திரு. அப்துல் அமீது கலந்து பேசியிருக்கிறார். கலந்துரையாடலில் திரு.கைலாசமும் பங்கேற்று, ”திரு,மாதவனின் கருத்துகள் ஆட்சி அலுவலரின் மனத்தைப் புண்படுத்தி இருக்கும் என்று கருதுகிறேன் !


திரு.மாதவன் ஏன் எப்படிச் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டார் என்பதை எண்ணினால் எனக்கும் வருத்தமாக இருக்கிறது. முப்பத்து ஐந்து ஆண்டுகள் அப்பழுக்கில்லாமல் பணியாற்றிய ஒருவரை இவ்வாறு அவர் பண்பாடில்லாமல் சொற்களால் நோகடித்திருப்பது ஏற்க முடியாத  செயல்”, என்று தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் !

 

சற்று நேரத்திற்குள், பயிற்சி நிலையம் எங்கும் இதுவே பேசு பொருள் ஆகிவிட்டது. திரு.மாதவனின் கருத்தை எந்த அலுவலரும் ஏற்கவில்லை. மாறாக அவர் மீது குறை சொல்லி அவரைக் கடிந்து கொள்ளும் நிலை உருவாகியது!


பயிற்சி அலுவலர்  திரு.கைலாசம் உள்பட பணிமனை அலுவலர்களில் முகாமையான சிலரையும், அலுவலகத்தில் சிலரையும் முதல்வர், அழைத்து, அடுத்து என்ன செய்வது என்று அவர்களிடம் கருத்தைக் கேட்டிருக்கிறார் !

 

முடிவில் திரு.கைலாசம், திரு.துரைசாமி, திரு.நமசிவாயம் உள்பட ஐந்து பேர் என் வீட்டிற்கு வந்து என்னைச் சந்தித்துச் சமாதானம் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அன்று (21-04-2001) மாலையே தொழில் நுட்ப அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள்  ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழு என் வீட்டிற்கு வந்து என்னைச் சந்தித்துப் பேசினர் ! 


விடுப்பை விலக்கிக் கொண்டு அலுவலகம் வரவேண்டும், 30-04-2001 அன்று அவர்கள் அளிக்கும் பணி ஓய்வுப் பாராட்டு விருந்தில் பங்கேற்க வேண்டும் என்பதை மையமாக வைத்து அவர்கள் பேச்சு அமைந்தது !

 

நான் வர இயலாது என்று மறுத்துவிட்டேன். திரு.மாதவனின் பேச்சு என்னைக் களங்கப்படுத்திவிட்டது. பாகுபாடு பாராமல் அனைவருடனும் நட்புரிமையுடன் பழகி வந்த எனக்கு அவரது பேச்சும் செயலும் என் முகத்தில் அழுக்கைப் பூசுவதாக அமைந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி ! சென்று வாருங்கள் ! என்று சொல்லி விடாப்பிடியாக என் நிலையில் உறுதியாக நின்றேன் !

 

அவர்கள் தொலைபேசி மூலம் முதல்வரிடம் தங்கள் முயற்சி பயனளிக்கவில்லை என்று விளக்கியிருப்பார்கள் போலும் ! அன்று பின் மாலைப் பொழுதில் முதல்வர் திரு.அப்துல் அமீது அவர்கள் என் வீட்டிற்கு வந்து என்னைச் சமாதானப்படுத்தினர். ”சிந்தித்து முடிவு சொல்கிறேன்என்று அவரிடம் மறுமொழி தந்து அவரை அனுப்பி வைத்தேன் !

 

மறுநாள் பணிமனையில் பல்வேறு அலுவலர்கள் ஒன்று கூடி, ஆட்சி அலுவலர் மனம் புண்பட்டுப் போயிருக்கிறார். நாம் என்ன சமாதானம் சொன்னாலும் அது அவர் மனத்திற்கு மருந்தாகவில்லை. இதை இப்படியே விட்டுவிட முடியாது !


பணி ஓய்வு பெறும் ஒரு அலுவலர், பாராட்டு விழாவின்றி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுதல் நம் நிலையத்திற்கே கேவலம். இதற்கு ஒரே வழி திரு.மாதவன் நேரில் சென்று அவரிடம் பேசுவது தான் என்று அனைவரும் முடிவு செய்து திரு.மாதவனிடம் சென்று உரையாடியிருக்கிறார்கள் !

 

மறுநாள் (23-04-2001) திரு.மாதவன், திரு.கைலாசம், உதவியாளர் திரு.கோபாலகிருஷ்ணன் மூவரும் என் வீட்டிற்கு வந்தனர். அவர்களை வரவேற்று அமரவைத்துவிட்டு, தேநீர் கொடுத்தேன் ! 


தேநீர் அருந்திய பின் திரு.மாதவன் எழுந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டு, “என்னை மன்னித்து விடுங்கள். நான் தங்களைப் பற்றி அலுவலர்களிடம் அப்படிக் கருத்துச் சொன்னது தவறு தான். தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு, அலுவலகம் வரவேண்டும், பணி ஓய்வுப் பாராட்டு விழாவிலும் கலந்து கொள்ள வேண்டும். இது எங்கள் அன்பு வேண்டுகோள்என்றார் !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

வேதரெத்தினம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, கும்பம் (மாசி) 29]

{13-03-2022}

-------------------------------------------------------------------------------------