தேடுக !

திங்கள், 20 டிசம்பர், 2021

மலரும் நினைவுகள் (41) சண்முகத்தின் வாளுக்கு இரையான பலியாடு !

(1992 - ஆம் ஆண்டு நிகழ்வுகள்)

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய அலுவலகத்திற்கு 1992,  மே மாதம் 2-ஆம் நாள் வந்து இறங்கிய  திரு.சண்முகம் என்ன செய்தார் தெரியுமா ? முதல்வர் (பொ) திரு..இரத்தினம் அவர்களிடம், பணிமனை உதவியாளர்களுக்கான நேர்காணல் கோப்பினைக் கேட்டு வாங்கி ஐந்து நிமிடங்கள் ஆய்வு செய்தார் !

 

பின்பு முதல்வர் (பொ) அவர்களிடம் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்டதாகத் தெரிகிறது !

 

(01) துணை இயக்குநர் / முதல்வர் பணி ஓய்வு பெறும் நாளில் நேர்காணலை ஏற்பாடு செய்திருந்தது அவர் சொந்த முடிவா அல்லது வேறு யாரும் சொல்லிச் செய்த ஏற்பாடா ?

 

(02) தேர்வு செய்யப்பட்ட மூவருக்கும் அலுவலகத்தில் உள்ள யாருடனாவது தொடர்பு உண்டா ?

 

(03) பணி விதிகளைப் பற்றிய செய்திகளை அவர்களுக்குத் தந்து உதவியது யார் ?

 

(04) தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்து தடையாணை பெறுவதற்கு அவர்களுக்கு உதவியது யார் ?

 

மேற்கண்ட கேள்விகளுக்கு திரு.இரத்தினம் அவர்கள் அளித்த மறுமொழியின் பிழிவு  எனத் தெரிய வருபவை:-

 

(01) தேர்வு செய்யப்பட்ட மூவரில் ஒருவர் ஓய்வு பெற்ற ஆட்சி அலுவலர் திரு.முகமது கனி யூசூப்பின் மகன்.

 

(02) திரு.முகமது கனி யூசூப் பணி விதிகள் பற்றிய செய்திகளை அறிந்தவர் தான்.

 

(03) ஆனால் அவருக்கு பணிவிதிகள் புத்தகத்தை (SERVICE RULES BOOK)  கொடுத்து அதை ஒளிப்படி (XEROX) எடுத்துக்கொள்ள உதவியது அலுவலகத்தில் உள்ள ஒருவராகத் தான் இருக்கக் கூடும்.

 

(04) தேர்வு பெற்றாலும் அதை வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், திரு.ஜவஹர், திரு.அங்குசாமி இருவரது முகவரியையும் திரு.கனி யூசூப்பிற்குக் கொடுத்து உதவியது அலுவலகத்தில் உள்ள யாரோ ஒருவராகத்தான் இருக்க முடியும். 

 

(05) பணி விதிகள் மட்டுமல்லாது அனைத்து விதிகள் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருப்பவர் பணியமைப்புப் பிரிவு அலுவலக மேலாளர் திரு.வை.வேதரெத்தினம்.

 

(06) திரு.முகமது கனி யூசூப்பும் திரு.வேதரெத்தினமும் ஒரே ஊர்க்கார்கள்நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள்.

 

முதல்வர் (பொ) திரு.இரத்தினம் அவர்களின் மறுமொழியை கேட்ட திரு.சண்முகம்,


விதிமுறைகளில் வல்லவர் என்று அடையாளம் காட்டப்பட்ட அலுவலக மேலாளராகிய நான் தான் இதற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று  ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் !

 

திரு.சண்முகம் ஏனோ என்னை அழைத்துப் பேச முன்வரவில்லை. சற்றுநேரத்தில் புறப்பட்டுச் சென்றுவிட்டார். பணிமனைப் பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை !

 

திரு.சண்முகத்திற்கு ஏற்பட்ட சினத்தின் வீச்சு  5-5-1992 அன்று காலை சேலத்தில் வெளிப்பட்டது. சேலத்திலிருந்து ஈரோட்டுக்கு என்னை இடமாற்றல் செய்யும் ஆணை அன்று வந்திருந்தது. இடமாற்றலாணையுடன்  பிற கடிதங்களும் இணைந்து   அட்டை மடிப்புக்குள் (Thapal Pad) வைத்து என் மேசைக்கு வந்து சேர்ந்தது. எடுத்துப் படித்துப் பார்த்தேன். என்னை ஈரோட்டுக்கு மாற்றிவிட்டு அந்த இடத்தில் (சேலத்தைச் சேர்ந்த) திரு.கு.பெ.நாகராசன்  பணியமர்த்தப் பட்டிருந்தார் !

 

முதல்வர் (பொ) திரு..இரத்தினம் களங்கமில்லாதவராக இருந்தால், இடமாற்றல் ஆணையைப் பார்த்தவுடன் என்னை அழைத்து அதுபற்றிய செய்தியை என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை. குற்றம் செய்த மனது குறு குறுத்தது போலும். இயல்புக்கு மாறான அவரது முகத் தோற்றமே அவர்  கீழறுப்பு வேலைக்குச் சொந்தக்காரர் என்பதை அவரைச் சந்தித்த போது எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது !

 

இடமாற்றலாணையைப்  பார்த்த அடுத்த இரண்டாவது நிமிடம் நான் அவரிடம் சென்று இப்பொழுதே என்னைப் பணியிலிருந்து விடுவியுங்கள். இங்கு நான் தொடர்ந்து பணி புரிய விரும்பவில்லை என்றேன். சற்று அதிர்ந்துபோன அவர், ஏன் அவசரப்படுகிறீர்கள் ஒருவாரம்  கழித்துப் போகலாமே என்றார். முடியாது என்று மறுத்துவிட்டு, பணியமைப்புப் பிரிவு உதவியாளரிடம் ஆணையைத் தந்து, இன்று முற்பகல் என்னை பணியிலிருந்து விடுவித்து வரைவு எழுதி வாருங்கள் என்றேன் !

 

கோப்பு வரைவுடன் வந்தது. என்னிடமிருந்த பொறுப்புக்களை இன்னொரு அலுவலக மேலாளர் திரு.எம்.கோபாலகிருஷ்ணனை ஏற்றுக்கொள்ளச்  சொல்லி அவருக்கு விடுவிப்பு ஆணையின் படியொன்று  குறியீடு செய்யப்பட்டது !

 

கோப்பு முதல்வருக்குச் சென்றது. வரைவுக்கு ஒப்புதல் அளித்த அவர் 5-5-1992 முற்பகல் என்பதற்கு மாற்றாக பிற்பகல் என்று மாற்றியிருந்தார். மதியம் 2 - 00 மணிக்கு அமைச்சுப் பணியாளர்களின் சார்பில் தேநீர் விருந்து. 3-00 மணிக்கு வீட்டிற்கு வந்துவிட்டேன் !

 

மறுநாள் காலை 10-00 மணிக்கு ஈரோடு அரசினர் தொழிற் பயிற்சி நிலைய அலுவலகத்திற்குச் சென்று ஆட்சி அலுவலர் திரு.சோம.நடராசன் அவர்களைப் பார்த்துப் பேசினேன்; அடுத்து முதல்வர் திரு.இரா..தங்கவேலு அவர்களைப் பார்த்து  பணியேற்பு அறிக்கையைத் தந்தேன் !

 

அலுவலகத்தில் பணியமைப்புப் பிரிவு எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்னொரு மேலாளரான திரு.இரத்தினமூர்த்தி கணக்குப் பிரிவின் மேலாளரானார். அவர் மனைவி திருமதி பரிமளா தேவி பணியமைப்புப் பிரிவு உதவியாளர். திரு.பழனிச்சாமி (ROYAL ENFIELD RED COLOUR BIKE RIDER) , இராமசாமி என வேறு இரு உதவியாளர்கள் இருந்தனர். நினைவில் வாழும் திரு...பாலகிருஷ்ணன் (இயக்ககத் துணை இயக்குநர்) அவர்களின் மகன் திரு.சிவாஜி என்பவர் இளநிலை உதவியாளர். பிற அலுவலர்களின் பெயர்கள் நினைவில்லை !

 

அன்றாடம் சேலத்திலிருந்து ஈரோட்டுக்குப் பேருந்து மூலமே சென்று வந்துகொண்டிருந்தேன். பயணத்திலேயே ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் செலவிட நேர்ந்தது ! இதற்கான மாற்று வாய்ப்பு என்ன என்பது பற்றி முனைப்பாகச் சிந்திக்கலானேன் !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”வேதரெத்தினம்” வலைப்பூ,

[தி.: 2052, சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

-------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக